சசிகலா இதை செய்தால் அதிமுகவில் இணைப்பதைப் பற்றி பரிசீலிக்கலாம் - ஓ.பி.எஸ் அதிரடி பதில்
பெங்களூருவில் தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கினார். இதனால் அவர் அதிமுகவில் இணைவது பற்றிய பேச்சுக்கள் மறைந்தன. இந்நிலையில் தற்போது சசிகலா இணைப்பு பற்றி ஓ.பி.எஸ் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”கழக ஆட்சி அமைய அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா கூறியுள்ளார்.
கழக ஆட்சி என்றால் அதிமுக ஆட்சிதான். அதை நினைத்து அவர் சொல்லியிருந்தால் அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். அவரது முடிவை நான் உண்மையிலேயே வரவேற்கிறேன். அவர் சொன்னது அவரது பெருந்தன்மையாகத்தான் நான் பார்க்கிறேன்.
அவர் மீது எனக்கு எந்த வருத்தம் கிடையாது. முதலிலிருந்தே அவர் மீது வருத்தங்கள் எனக்கு கிடையாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில சந்தேகங்கள் பொதுவெளியில் அவர் மீது இருந்தன. சில பிரச்சினைகளில் அவருக்கு அவப்பெயர் உருவாகக்கூடிய சூழல் இருந்தது. அதனால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வைத்து நிரபராதி என நிரூபித்தால் அவர் மீதிருந்த அவப்பெயர் விடுபடும் என்று தான் கூறியிருக்கிறேன்.
அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் சசிகலாவுடன் இருந்துள்ளேன். 32 ஆண்டு காலம் அவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டிய உதவிகளை அவர் செய்துள்ளார்.

சசிகலா தான் இப்போது அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டார். அரசியலுக்கு வந்தால் அவருக்கு அதிமுகவில் இடம் இருக்கிறதா? என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”அதற்கு வாய்ப்பே கிடையாது என்று முதல்வர் கூறி உள்ளார். என்னை பொருத்தவரை அவர் 4 ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் வந்தால் ஜனநாயக முறையில் அதிமுக இயங்குகிறது. தனிப்பட்டவருக்காகவோ, குடும்பத்திற்காகவோ இயங்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஜனநாயக முறையில் கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. இதே போல் இந்த அமைப்பை அவர் ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்றுக்கொள்வதை பரிசீலித்து பார்க்கலாம்” என்றார்.