சசிகலா பேனர்களை கிழித்து தீயிட்டு கொளுத்திய கன்னட அமைப்புகள்!
சசிகலா சென்னைக்கு நோக்கி வந்துக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவின் பேனர்களை, கன்னட அமைப்பினர் கிழித்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ம் தேதி விடுதலையானார்.
அதிமுக கொடி பறக்கும் காரில் சென்னையை நோக்கி வரும் அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சசிகலா பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக ஓய்வெடுத்தார். அவர் தமிழகம் வருவதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், வரவேற்பு பேனர்களும், போஸ்டர்களும் ஒட்டினார்கள்.
இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்புகள், சசிகலா தொடர்பான பேனர்களையும் போஸ்டர்களையும் கிழித்து தீயிட்டு கொளுத்தினார்கள். சசிகலாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, கர்நாடக எல்லை அத்திப்பள்ளியில் சட்டஒழுங்கு காரணமாக வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்களை காவல்துறையினர் அகற்றியது குறிப்பிடத்தக்கது.