சரத்குமாருக்கு தேசிய அளவில் பதவி: வானதி சீனிவாசன் உறுதி
தேர்தலுக்கு பிறகு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாருக்கு தேசிய அளவில் கட்சிப் பதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சரத்குமார் அருமையான தலைவர். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. 5 மாநில தேர்தல் நடப்பதால் தற்போது யாருக்கும் தேசிய பதவி கொடுக்க முடியாது. தேர்தலுக்கு பிறகு சரத்குமாருக்கு தேசிய அளவில் பதவி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

சமீபத்தில் சரத்குமார் பாஜகவில் தனக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்ரே வானதி சீனிவாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சரத்குமார் ஆதங்கம்
அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டமொன்றை நடத்திய சரத்குமார், பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் அங்கீகாரமும் தனக்கு கிடைக்காததால் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்க ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் சில ஆதரவாளர்கள், பாஜகவிடம் இருந்து விலகி மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை துவங்குமாறு கூறியதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை. பொறுப்பு இருந்தால் தானே பணியாற்ற முடியும்.ஒரு உறுப்பினராக மட்டுமே எப்படி செயல்பட முடியும்?பாஜக தனக்கு பொறுப்பு வழங்காமல் இருப்பதால் மனவேதனையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு தன் கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்ட சரத்குமார், தனக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் அவருக்கு கட்சியில் எந்த ஒரு பொறுப்போ பதவியோ வழங்கப்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது.