ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன்: சரத்கமல் உற்சாகம்
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் கூறியுள்ளார்.
ஜூலை 23 ஆம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், டெல்லியை சேர்ந்த மனிகா பத்ரா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுதிர்தா முகர்ஜி ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், சரத் கமல்-மனிகா பத்ரா இணை கலப்பு இரட்டையர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் 4வது முறையாக சரத்கமல் பங்கேற்கும் நிலையில், கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது கடினமாகவே இருந்தது என்றும், பயணக்கட்டுப்பாடு, சர்வதேச போட்டிகள் ரத்து உள்ளிட்ட விஷயங்களால் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் போட்டிக்கு தயாராகுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிறைய ஆதரவும், ஊக்கமும் அளித்தன. கலப்பு இரட்டையர் பிரிவில் நாங்கள் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதில் 16 இணைகள் மட்டுமே கலந்து கொள்வதால் முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் பதக்கத்தை கைப்பற்றி விடலாம் என்றும் சரத்கமல் தெரிவித்துள்ளார்.