ராஜஸ்தான் அணியில் வெடித்தது சண்டை : கேப்டன் சஞ்சு சாம்சன் - அணி நிர்வாகம் மோதல்
ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் ராஜஸ்தான் அணியில் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பொதுவாக ஐபிஎல் தொடர் தொடங்கியது ரசிகர்களிடையே சண்டை ஆரம்பித்து விடும். சமூக வலைத்தளங்களில் கடுமையாக மோதிக் கொள்வது வழக்கம். இதேபோல் ஒவ்வொரு அணியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் போட்டி குறித்த தகவல்களை வெளியிடுவார்கள். மற்ற அனைத்து அணிகளை விடவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் எப்பொழுதும் ஆக்டிவாகவே இருக்கும்.
குறிப்பாக அந்த அணி தோற்கும் போட்டிகளில் எல்லாம் சரமாரியாக சொந்த அணி வீரர்களையே கிண்டல் செய்து பதிவுகளை வெளியிடும்.இதற்கு அடுத்தப்படியாக ராஜஸ்தான் அணியின் சமூக வலைதள பக்கம் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல ஆக்டிவாக உள்ளது. சமீபத்தில் கூட ட்விட்டரில் அந்த அணி பதிவிட்டதாக வெளியான ட்வீட்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
காரணம் யுஸ்வேந்திர சாஹலின் புகைப்படத்தை பதிவிட்டு ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனை அறிமுகம் செய்கிறோம் என அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சனும் இதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் சாஹல் தான் விளையாட்டாக இதனை பதிவிட்டதாக அணி நிர்வாகம் விளக்கமளித்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணி நேற்று பதிவிட்டுள்ள ஒரு பதிவு அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனையே கடுப்பாக்கியுள்ளது. அதாவது சஞ்சு சாம்சன், தலையில் டர்பன் அணிந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்ட அந்த அணி, அதில் நீங்கள் பார்ப்பதற்கு கவர்சியாக உள்ளீர்கள் என பதிவிட்டிருந்தது.
இதனை கவனித்த சஞ்சு சாம்சன் நட்பு அடிப்படையில் இது போன்று செய்வதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒரு அணியாக சற்று பொறுப்புடன் இருக்க வேண்டும் என வெளிப்படையாக சொந்த அணி நிர்வாகத்தையே விமர்சித்துள்ளார். பின்னர் இந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.