முட்டாள்தனம் செய்த கேப்டன் கே.எல்.ராகுல் - கடுமையாக சாடிய முன்னாள் இந்திய வீரர்
இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஒரு முட்டாள்தனத்தை செய்துவிட்டார் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக சாடியுள்ளார்.
தென்னாபிரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணிக்கு முதல் முறையாக கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பு வகித்தார். இப்போட்டியில் அவரது சில தவறான முடிவுகளால் தென்னாப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாப்பிரிக்கா அணியில், கேப்டன் பவுமா மற்றும் வேன் டர் டசன் இருவரும் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். அதேசமயம் இப்போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர் ஆல்ரவுண்டர் ஆவர். கூடுதல் பந்துவீச்சு வாய்ப்பாக இருக்கும் என்று உள்ளே எடுத்து வரப்பட்டார்.
ஆனால் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு இறுதிவரை கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறிவந்த நிலையில் இவருக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பலரும் கேள்விகளை எழுப்பினர். கேப்டன் பொறுப்பில் அனுபவம் இல்லை என்று கே.எல்.ராகுல் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் சாஹல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குள் வந்திருப்பதால் அவருக்கு 10 ஓவர்கள் கொடுக்க வேண்டுமென கேஎல் ராகுல் நினைத்திருக்கிறார். அவருக்கு விக்கெட்டுகள் விழவில்லை என்று தெளிவாக தெரிந்தது. பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வைக்க விக்கெட் வேண்டும் என்று அவர் எண்ணவில்லை என இந்த முடிவில் இருந்தே தெரிகிறது. மேலும் கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் இல்லை என்றும் தெளிவாக தெரிகிறது என முன்னாள் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
மேலும் சுழல் பந்துவீச்சை நன்றாக விளையாடி வந்த பவுமாவிற்கு, வெங்கடேச ஐயர் வந்திருந்தால், வேகப்பந்து வீச்சில் அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம். ராகுல் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக நான் நினைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.