கேன்சரால் பாதிக்கப்பட்டதும் கதறி அழுதேன் - கேஜிஎஃப் பட நடிகர் சொன்ன தகவலால் அதிர்ச்சி
தனக்கு கேன்சர் என தெரிந்ததும் பல மணிநேரம் கதறி அழுததாக பிரபல நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றின் பொதுமுடக்கத்தின்போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது நுரையீரல் புற்றுநோய் 4ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் சில மாதங்கள் கழித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடவுள் கடினமான சோதனைகளை வலிமையானவர்களுக்கு கொடுப்பார் என பொதுவாக கூறுவதுபோல், எனக்கும் எனது குடும்பத்திற்கும் சில வாரங்கள் கடினமானதாக இருந்தது. இன்று இந்த போரில் ஜெயித்து எனது குழந்தையுடைய பிறந்தநாளில் எனது உடல்நலத்தை அவர்களுக்கு சிறந்த பரிசாக கொடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் எனது சகோதரி பிரியா தத் என்னிடம் புற்றுநோய் இருப்பது குறித்து தெரிவித்தபோது தனது குடும்பம் மற்றும் வாழ்க்கையை நினைத்து தான் பலமணிநேரம் அழுததாகக சஞ்சய் தத் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அதனை எதிர்த்து போராடி எப்படி வலிமைபெற்றார் என்பது பற்றியும், தனது மருத்துவர் என்ன சொன்னார் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.
அதாவது ஊரடங்கில் ஒரு சாதாரண நாளில் நான் படிகளில் ஏறிக்கொண்டிருந்த நிலையில் என்னால் மூச்சுவிட முடியவில்லை. அதன்பிறகு குளித்தேன், அப்போதும் மூச்சுவிட முடியவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. எனது மருத்துவரை அழைத்தேன். எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எனது நுரையீரலில் பாதிக்கும்மேல் நீர்கோர்த்திருந்தது தெரியவந்தது.
எனவே முதலில் நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லாரும் அது காசநோயாக இருக்கும் என நினைத்தனர்; ஆனால் அது கேன்சர் என பின்பு தெரியவந்தது. அதை என்னிடம் சொல்வது என்பது அவர்களுக்கு கடினமாக இருந்தது. நான் யாருடைய முகத்தையாவது உடைத்துவிடுவேன் என்கிற பயம் இருந்தது.
எனது சகோதரி என்னிடம் வந்து இதுபற்றி கூறினார். ஓகே. இப்போது என்ன? என்னென்ன செய்யவேண்டும் என திட்டமிடுங்கள் என்று கூறினேன். ஆனால் எனது குழந்தைகள், மனைவி மற்றும் வாழ்க்கையை நினைத்து கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுதேன் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
முதலில் விசா கிடைக்காததால் ஹிருத்திக் ரோஷனின் தந்தையின் அறிவுரையின்படி இந்தியாவிலேயே சிகிச்சை எடுத்ததாகவும், தற்போது கீமோதெரபிக்கு மட்டும் துபாய் சென்றுவந்ததாகவும், தற்போது கேன்சரின்றி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.