போலீசுக்கு சென்ற நடிகை மஞ்சு வாரியர்... கைது செய்யப்பட்ட பிரபல இயக்குநர்
மலையாளத் திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரன் மீது பிரபல நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல மலையாள திரைப்பட இயக்குநர், சணல்குமார் சசிதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் மஞ்சு வாரியாரை காணவில்லை. அவர், கந்துவட்டி கும்பல் மற்றும் மஞ்சு வாரியாரின் மேலாளர்களாக இருக்கும் பினீஷ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரின் பிடியில் இருக்கிறார். அவர், உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்தப் பதிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஊடகங்களும் பத்திரிக்கைகளும் இந்தத் தகவலை பெரிதாக்கி மஞ்சுவாரியாரைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மஞ்சு வாரியர் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.இது மஞ்சு வாரியாரின் ரசிகர்களுக்கு சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்தது. இதனிடையே மஞ்சுவாரியர் கொச்சி நகரக் காவல் ஆணையர் டி எச் நாகராஜிடம் நேரடியாகச் சென்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் மலையாள திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரன் சமூக வலைதளங்கள் மூலம் தன்னை அவமானப்படுத்துவதாகவும், தன்னை தேவையின்றி பின் தொடர்வதாகவும்" குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் இயக்குநர் சணல்குமார் சசிதரன் மீது எர்ணாகுளம் எளமகரை போலீசார், தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து கொச்சி நகர காவல் ஆணையாளர் உத்தரவுபடி எர்ணாகுளம் போலீசார் பாறசாலை வந்து பாறசாலை போலீசார் உதவியுடன் நெய்யாற்றங்கரையிலுள்ள வீட்டில் இருந்து இயக்குநர் சணல்குமார் சசிதரனை கைது செய்தனர். அவரை எர்ணாகுளம் எளமகரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் கைது செய்யப்பட்டு போலீசார் அழைத்துச் செல்லும்போது மஞ்சுவாரியார் கொடுத்த புகார் கூட ஏதோ மிரட்டலின் அடிப்படையில்தான் எனவும் இயக்குனர் சணல்குமார் சசிதரன் குற்றச்சாட்டை முன்வைத்து தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்தார். இந்த சம்பவம் மலையாள திரையுலகிலும், ரசிகர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.