திருச்சி அருகே லாரி உரிமையாளர் அடித்துக்கொலை - உடலை கட்டி ஏரியில் வீசிச்சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு
திருச்சி அருகே லாரி உரிமையாளர் மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் ஏரியில் வீசிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் , மணச்சநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் சொந்தமாக லாரி வைத்து, தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி லோகேஷ்வரி என்ற மனைவியும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். சதீஷ்குமார், தற்போது மணச்சநல்லூர் காந்திநகர் 7-வது குறுக்கு சாலையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள வறட்டு ஏரியில், சதீஷ்குமார் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக மிதந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மணச்சநல்லூர் போலீசார் மற்றும் சமயபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஏரியில் மிதந்த சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார், ஜீயபுரம் டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து, இக்கொலை சம்பவம் குறித்து மணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.