வனத்துறை அலுவலகத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி - பெண் வனக்காப்பாளரை மகிழ்வித்த சக பணியாளர்கள்
நத்தம் வனத்துறை அலுவலகத்தில் பெண் வனக்காப்பாளருக்கு சக வனத்துறை பணியாளர்கள் வளைகாப்பு நடத்தி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வனச்சரகம் கோட்டையூர் வனப்பகுதியில் விஜயலட்சுமி (31) வனக்காப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது பெற்றோர் ராம்நாடு அருகே சாயல்குடி பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இவருக்கு சத்தியேந்திரன் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 9 மாத கா்ப்பிணியாக இருக்கிறார் விஜயலட்சுமி. இதனை அறிந்த நத்தம் வனசரக அலுவலர் பாஸ்கரன் மற்றும் வனப் பணியாளர்கள் விஜயலட்சுமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தார்கள்.
அதன்படி வனச்சரக அலுவலர் பாஸ்கரன், வனவர்கள் சம்பந்தமூர்த்தி, முத்துசாமி ஆகியோா் முன்னிலையில் வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள், பெண் வனக் காப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 7 விதமான உணவு, பிரியாணி வகைகளுடன் சேலை, பழங்கள், வளையல் உள்ளிட்ட பொருள்களை சீா்வரிசையாக வைத்து வனத்துறையினர் சிறப்பாக நடத்தினார்கள்.
சக வனத்துறை பெண் வனக்காப்பாளருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வனத்துறை அலுவலகத்தில் நடந்தது. சக பெண் வனபணியாளர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இந்நிகழ்ச்சியில் காணப்பட்டார்கள்.