இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்... இல்லையென்றால் ஜலசமாதி அடைவேன்: ஜகத்குரு ஆச்சார்ய மஹாராஜ்
இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஜலசமாதி அடைந்து விடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு மடங்களும் மடாதிபதிகளும் இருக்கிறார்கள். அவர்களின் சிலர் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர்.
கொரோனா 2வது அலையின் போது கும்பமேளாவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது இத்தகைய மடாதிபதிகளை மீறி அரசால் எதுவும் செய்ய முடியாத சூழலே நிலவியது.
இந்நிலையில், பலம் வாய்ந்த ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ். இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக கூறியிருக்கிறார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து தேசகமாக அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் " என்று கூறினார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்தார். அதனையடுத்து அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
உத்தரப் பிரதேசம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் அதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் உ.பி.யைச் சேர்ந்த முக்கிய ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.