ஆடுகளை மேய்க்கச் சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கியக் கொண்ட விவசாயி - பதற வைத்த வீடியோ காட்சி!
ஆடுகளை மேய்க்கச் சென்ற விவசாயி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 3 நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தப் பகுதியில் ஓடும் சுவர்ணமுகி நதியில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இந்நிலையில், இன்று காலை நதியில் வெள்ளப்பெருக்கு திடீரென்று பெருக்கெடுத்தது.
அப்போது, அந்த வழியாக ஆடு மேய்ப்பதற்காக 50 ஆடுகளுடன் சென்று கொண்டிருந்த விவசாயி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
மழை வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவரை மீட்க இயலாத நிலை ஏற்பட்டது. மீட்க சென்ற அதிகாரிகளிடம், ஆடுகளையும் மீட்டால்தான் நானும் வெளியே வருவேன் என அடம்பிடித்திருக்கிறார். ஆனால் ஹெலிகாப்டர் வரவழைத்த மீட்புக்குழுவினர் உதவியுடன் விவசாயி மீட்கப்பட்டார்.