சாலையில் கேட்பாரற்று கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த மூதாட்டி - குவியும் பாராட்டு!
கோவையில் சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிரதன லன செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கோவை க.க.சாவடி சந்தைபேட்டையைச் சேர்ந்தவர் கருப்பம்மாள் (60). இவர் நேற்று மதியம் வீட்டிற்கு செல்வதற்காக வேலந்தாவளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஒரத்தில் விலை உயர்ந்த செல்போன் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
இதனை கவனித்த மூதாட்டி, அருகில் யாரும் இல்லாததால் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு அருகில் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அந்த செல்போன், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (24) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
உடனடியாக அவரை காவல் நிலையம் வரவழைத்த போலீசார், மூதாட்டியின் கைகளாலேயே தவறவிட்ட இளைஞரிடம் செல்போனை ஒப்படைக்க செய்தார்கள். இதைத் தொடர்ந்து, செல்போனை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி கருப்பம்மாளின் நேர்மையான செயலை பாராட்டி, க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டு தெரிவித்தார்கள். மேலும், மூதாட்டியின் நேர்மையான செயலுக்கு அந்த பகுதி பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.