‘மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு’ - இன்று நாடு தழுவிய முழு அடைப்பு!
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாரத் பந்த் காரணமாக பஞ்சாப் – ஹரியானா எல்லையை விவசாயிகள் முடக்கி இருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டார்கள். பாரத் பந்த் காரணமாக கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கவில்லை.
புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்காத நிலையில், குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
அதேபோல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்டோரும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோ டெம்போக்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.