மனைவியை தாக்கிய முதியவர் - கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்
திருச்செங்கோடு அருகே மதுபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி, தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் பழனி (67). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு யுவராஜ் என்ற மகன் இருக்கிறார். பழனிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால், அடிக்கடி மது அருந்திவிட்டு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மதுபோதையில் இருந்த பழனி, லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பழனி வீட்டில் இருந்த இரும்பியை எடுத்து லட்சுமியை தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.
அப்போது, ஆத்திரத்தில் மனைவியை கொல்ல துணிந்துவிட்டத்தை எண்ணி வேதனையடைந்த பழனி, திடீரென கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அங்கு பழனி பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.