கிணற்றில் விழுந்த பள்ளி மாணவன் - 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு - சோகத்தில் மூழ்கியது கிராமம்
கிணற்றில் விழுந்த பள்ளி மாணவனை சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். இதனால், கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கம்மவார் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் வெற்றிவேல் (14). வெற்றிவேல் விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வெற்றிவேல் தன்னுடைய நண்பர்களுடன் விளாம்பட்டி ரோட்டில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றான். அப்போது கிணற்றில் குதித்தபோது கல்லில் மோதி கிணற்றில் விழுந்துள்ளார்.
உடனே அவரது நண்பர்கள் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவனின் உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.