தன்னுடைய நாய்க்காக ரூ. 2.5 லட்சத்தில் முழு விமானத்தையும் புக் செய்த பாசமான உரிமையாளர்!
மும்பை சேர்ந்த ஒருவர் தன்னுடைய நாய் ஆடம்பரமாக பயணம் செய்வதற்காக ஏர் இந்தியா விமானத்தின் முழு வணிக வகுப்பு அறையை பதிவு செய்து அழைத்து சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாக்ஜோ என்ற நாயை வளர்த்து வரும் உரிமையாளர் மும்பையிலிருந்து சென்னைக்கு அதனை அழைத்துச் செல்ல ஏர் இந்தியாவில் ஒரு முழு வணிக வகுப்பை முன்பதிவு செய்துள்ளார்.
இந்த வணிக வகுப்பை முன்பதிவு செய்ய ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறார். மும்பையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பு ஒரு இருக்கை ரூ. 20,000 ஆகும். எனவே அவர் மொத்த இருக்கைகளையும் புக் செய்ததால் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்பதிவு செய்ததையடுத்து அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டி கடந்த புதன்கிழமை அதிகாலை ஏர் இந்தியா விமானமான ஏஐ -671ல் ஏறி மும்பையிலிருந்து சென்னைக்கு இரண்டு மணி நேரம் குதூகலமாக பறந்து வந்துள்ளது. ஏர் இந்தியா ஏ-320 விமானத்தில் உள்ள ஜே-கிளாஸ் கேபினில் 12 இருக்கைகள் இருக்கின்றன.
இதனால் செல்லப்பிராணி வசதியாக பறந்தது என்று பிரபல பத்திரிகை நிறுவனம் புகைப்படத்தை ஷேர் செய்து மேற்கோள் காட்டி இருக்கிறது.உள்நாட்டு செல்லப்பிராணிகளை பயணிகள் அறையில் அனுமதிக்கும் ஒரே இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியாதான்.
கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் இடையே, ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் 2,000 செல்லப்பிராணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.