‘வேலை செல்ல வேண்டாம்’ என வாக்குவாதம் செய்த கணவன் - மனமுடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!
தென்காசி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து.
இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த கண்ணகி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
கணவர் மும்பையில் தங்கியிருந்ததால், கண்ணகி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் தங்கியிருந்து, பீடி சுற்றும் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில், கண்ணகியின் தம்பியின் திருமண நிகழ்ச்சிக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலைமுத்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, பீடி சுற்றும் வேலைக்கு செல்ல வேண்டாம் என அவர் கண்ணகியை வற்புறுத்தினார்.
இதனால், கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கண்ணகி, நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கண்ணகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடந்து 4 ஆண்டுகளில் கண்ணகி தற்கொலை செய்து கொண்டதால், தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டுள்ளது.