அதிவேகமாக வந்த வண்டி - தாயின் கண் முன்னே நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி பலி - அதிர்ச்சி சம்பவம்
திருப்பூர் பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு நான்கரை வயது மகள் தக்ஷனா உள்ளார். இன்று காலை சுரேஷ் வேலைக்கு சென்ற நிலையில் தீபா தனது மகளுடன் பூம்புகாரில் உள்ள மாமியார் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சிற்றுந்து அதிவேகமாக வந்தது. சிற்றுந்து மோதியதில் நிலை தடுமாறிய தீபா அருகே நின்று கொண்டிருந்த காரின் மீது இருசக்கர வாகனத்தில் மோதினார்.
இதில், தவறி விழுந்த சிறுமி தக்ஷனா சிற்றுந்து வாகனத்தின் அடியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் தாய் தீபாவின் கண்முன்னே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் தீபாவும் படுகாயம் அடைந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த தீபாவையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிற்றுந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.