கணவருடன் சண்டை - கோபத்தில் பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்!
சமீபத்தில் குழந்தை ஒன்று தாயால் தாக்கப்படும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண் விழுப்புரம் மாவட்டம் மோட்டூரைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் வடிவழகன். வடிவழகனுக்கும் துளசிக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாயாரிடம் விட்டுவிட்டு திரும்பிய வடிவழகன், விழுப்புரத்தில் துளசியின் செல்ஃபோனை ஆராய்ந்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
ஒன்றரை வயதான மகனைக் கொடூரமாக தாக்கி, அதை பதிவும் செய்துள்ளார் துளசி. இதனால் ஆத்திரமடைந்த வடிவழகன், ஆந்திரா சென்று விவாகரத்து கோப்புகளில் கையெழுத்து வாங்கிவிட்டு திரும்பி இருக்கிறார். இது குறித்து பேசிய வடிவழகன், “நடவடிக்கை சரியில்லை என்பதால் கொண்டுபோய் அவரது வீட்டில் விட்டுவிட்டேன்.
இங்கு வந்து செல்ஃபோனைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது என் குழந்தையை அடித்த விஷயம். உடனே போய் தாலியை வாங்கிவிட்டு, கையெழுத்தும் வாங்கி வந்துவிட்டேன்” என்றார்.
மேலும், இதுகுறித்து வடிவழகனின் தந்தை கூறுகையில், “குழந்தை தற்போது நன்றாக உள்ளது. குழந்தை தாயுடன் இருந்தவரைக்கும் தொல்லைதான். குழந்தையை அடிக்கடி அடித்துக்கொண்டிருப்பார்” என்றார். குழந்தை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தாயிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.