காலில் விழ வைத்து விவசாயியை ஏமாற்றிய விவகாரம் : வி.ஏ.ஓ, வி.ஏ.ஓ. உதவியாளர் கைது!
வி.ஏ.ஓ. அலுவலகத்தில் விவசாயியை தாக்கிவிட்டு அவரது காலில் விழுந்து சாதிப்பிரச்சனையை ஏற்படுத்த முயன்ற விவகாரத்தில் விஏஓ, விஏஓ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி அன்று, ஒட்டாபாளையம் விஏஓ அலுவலகத்தில் விவசாயி கோபால்சாமி என்பவர் காலில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டியலினத்தை சேர்ந்த முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விவசாயி கோபால்சாமி மீது அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.
ஆனால், மறுநாளே இந்த சம்பவத்தின் மற்றொரு முகம் தெரியவந்தது. நிலப்பிரச்சனை தொடர்பாக விஏஓ அலுவலரிடம் பேசிக் கொண்டிருந்த விவசாயி கோபால்சாமியை, விஏஓ உதவியாளர் முத்துசாமி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி தகாத வார்த்தையில் திட்டிய வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவியது. இதை மறைக்க முத்துசாமி காலில் விழுந்ததாக நாடகமாடியதும், வன்கொடுமை புகார் கூறியதும் தெரியவந்தது.
இந்த வீடியோ காட்சியை மூலம் விஏஓ கலைச்செல்வி, உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். மேலும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றன.
இதனையடுத்து, முத்துசாமி மீது தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்துதல், தாக்குதல் ஆகிய பிரிவுகள் கீழ், பொய்யான தகவல் அளித்ததற்காக விஏஓ கலைச்செல்வி மீதும் வழக்கு பதிந்து அன்னூர் போலீசார் கைது செய்துள்ளனர்.