வேகத்தில் விழுந்த நிலச்சரிவில் சிக்காமல் தப்பிய பேருந்து : ஓட்டுநரின் செயலால் பயணிகள் உயிர் தப்பினர்!
வீடியோ வைரல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பயணிகளுடன் சென்ற ஒரு பேருந்து நிலச்சரிவு பாதிப்பிலிருந்து தப்பிச் சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் பேருந்து, லாரி மற்றும் 4 கார்கள் சிக்கிக்கொண்டன. இந்த நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் பலர் பரிதாபமாக இறந்தனர்.
உயிர் இழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர். இந்த நிலச்சரிவில், 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. நைனிடால் பகுதியில் சாலையில் பேருந்து ஒன்று 14 பயணிகளுடன் நேற்று சென்றது.
திடீரென மலை பகுதியிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் வந்து விழுந்தது. இந்த நிலச்சரிவால் மண், கற்கள் இவற்றுடன் மரங்களும் வேருடன் சாய்ந்து விழுந்தன. இதனால் பேருந்து ஓட்டுனர் உஷாராக வண்டியை முன்பே நிறுத்தி விட்டார். நிலச்சரிவை கண்ட பயணிகளில் இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியே வெளியே குதித்தும், சிலர் வாசல் வழியே வெளியேறியும் தப்பி ஓடினார்கள்.
இதனையடுத்து, பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு சென்றடைந்தது. ஒரு சில நிமிடங்கள் முன்னே சென்றிருந்தால் பேருந்து விபத்தில் சிக்கி பெருமளவு சேதம் ஏற்பட்டிருக்கும்.
பேருந்து ஓட்டுனரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பயணிகள் உயிர் தப்பினர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.