ஏமாற்ற நினைத்த காதலன் - காவல்துறையினர் உதவியால் கரம்பிடித்த இளம் பெண்!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகுணா (26). இவர் டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அரியலூர் மாவட்டம், பெரிய ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்தவர் மணிவேல் (27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சுகுணாவும், மணிவேலும் கடந்த 8 ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். மணிவேல், சுகுணாவிடம் திருமண ஆசை வார்த்தைகளைக் கூறி பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிவேலுக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மணிவேலின் பெற்றோர் செய்து வந்தனர்.
இது குறித்து அறிந்த சுகுணா, நடந்த சம்பவங்கள் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது பெற்றோருடன் மணிவேலுவின் வீட்டிற்குச் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மணிவேல் மறுத்திருக்கிறார்.
இதனையடுத்து, சுகுணா, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது மணிவேலுவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் காதலித்ததையும், பழகியதையும் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார், அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து திருமணம் செய்து வைக்க ஆலோசனை கொடுத்தனர்.
அதன்படி உடனடியாக நேற்று இரவு 8.30 மணிக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே, எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ள வண்ணமுத்துமாரியம்மன் கோயிலில் இரு வீட்டார் சம்மதத்துடன் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி, திருமணம் செய்துகொண்டனர்.