புல் அறுத்த பெண்ணின் தலையை கவ்விய புலி - அரிவாளால் தாக்கித் தப்பிய வீரப் பெண்

samugam-tiger- girl-escaped
By Nandhini Dec 14, 2021 07:43 AM GMT
Report

புலி, தலையை கவ்வி இழுத்துச் சென்ற நிலையில், சுதாரித்துக் கொண்டு அரிவாளால் அப்புலியை தாக்கி உயிர் தப்பிய துணிச்சல் பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தாராகண்ட் மாநிலம், குமாவுன் கோட்டம் ஹல்த்வானி அருகில் உள்ள ஜவஹர் ஜோதி தமவுதுங்கா பகுதி உள்ளது.

இந்த பகுதியைச் சேர்ந்தவர் லீலா லட்வால் (45). இவர், வழக்கம் போல காட்டுப்பகுதியில் புல்லறுக்க சென்றார். லீலாவுடன் மற்ற பெண்கள் சென்றனர். சென்ற கொஞ்ச தூரத்தில் அனைவரும் புல் அறுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, லீலா புல்லறுத்துக் கொண்டிருந்தபோது, தன்னை நோக்கி ஏதோ விலங்கு ஒன்று வருவதை உணர்ந்து சுதாரித்தார். அதற்குள் புலி அவர் மீது பாய்ந்து, பலமாக அவர் தோளை தாக்கியது. பிறகு, அவர் தலையை கவ்வி இழுத்துச் செல்ல முயற்சி செய்தது.

இத்தாக்குதலை கொஞ்சமும் எதிர்பார்க்காத லீலா அதிர்ச்சி அடைந்து கீழே விழுந்தார். ஆனால், அவர் கையில் இருந்த அரிவாளை அவர் விடவில்லை. தாக்க முயற்சி செய்த புலியை அரிவாளால் புலியின் மண்டையில் ஓங்கி அடித்தார்.

அப்போது, புலி தன்னுடைய கால் நகங்களால் பலமாக லீலாவை அழுத்தியது. இருந்தாலும், துணிச்சலாக லீலா, அரிவாளால் தொடர்ந்து புலியை தாக்கிக் கொண்டே இருந்தார். கூடவே காப்பாத்துங்க என்று கத்தினார். இவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் ஓடிவந்தனர். அப்போது, புலி அங்கிருந்த குகைக்குள் அவரை இழுத்துச் செல்ல முயற்சி செய்தது.

அப்போது பெண்கள் ஓடி வந்தபோது, விட்டுவிட்டு ஓடியது. பின்னர், லீலாவை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 30 தையல் போடப்பட்டுள்ளதாகவும் தோளில் மட்டும் 10 தையல் போடப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி லீலா கூறுகையில், ‘என்னை தாக்கிய புலி, நான் மயங்கிவிட்டதாக நினைத்து குகைக்குள் ஓடியது. பிறகு வந்து என்னை உள்ளே இழுத்துச் செல்லலாம் என அது நினைத்திருக்கலாம். ஆனால், நான் எழுந்து நின்று அரிவாள் மற்றும் கற்களால் அந்த புலியை எதிர்கொள்ள தயாராக இருந்தேன்.

அதற்குள் மற்றவர்களும் வந்ததால், புலி ஓடிவிட்டது’ என்றார். இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், அனுமதியின்றி அந்தப் பெண்கள் காட்டுக்குள் சென்று புல்லறுத்துள்ளார்.

அங்கு செல்லக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் சென்றதால், இழப்பீடு ஏதும் அவருக்கு வழங்க முடியாது. மருத்துவச் செலவுக்கு வேண்டுமானால் உதவி செய்யலாம்’ என்றனர்.

புல் அறுத்த பெண்ணின் தலையை கவ்விய புலி - அரிவாளால் தாக்கித் தப்பிய வீரப் பெண் | Samugam Tiger Girl Escaped