காதலிக்க மறுத்த சிறுமியில் வாயில் விஷத்தை ஊற்றிய வாலிபர் - அதிர்ச்சி சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வபாண்டி. இவருடைய மகன் வேல்முருகன் (20). இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகன், சிறுமியின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்தச் சிறுமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், வேல்முருகன் தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து சிறுமியின் வாயில் ஊற்றியுள்ளார். பிறகு, மீதம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, கத்தியால் இடது கையில் அறுத்துக் கொண்டுள்ளார். இதில் 2 பேரும் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலிக்க வற்புறுத்தி சிறுமி வாயில் விஷத்தை ஊற்றிய வாலிபர் தானும் கையை கத்தியால் அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.