4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை வெளுத்து வாங்கிய மக்கள் - பரபரப்பு சம்பவம்
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி (35). இவரது உறவினர்கள் கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் உறவினரின் மகள் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி கடந்த 9ம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் சபரி.
இதனையடுத்து, நேற்று சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார். சிறுமி அதனை மறுத்துள்ளார். தொடர்ந்து சிறுமியை வற்புறுத்தியுள்ளார். மேலும், அருகில் இருந்த சிறுமியின் உறவினர்களிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சபரி கேட்டுள்ளார். இதனால், சபரிக்கும் சிறுமியின் உறவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனிடையே சிறுமி தனது உறவினர்களிடம் சபரி பாலியல் தொல்லை அளித்ததை தெரிவித்திருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சபரியை தர்ம அடி அடித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சபரியின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சபரியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.