வேலூரில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.50 கோடி மோசடி - அரசு பள்ளி ஆசிரியை கைது
வேலுாரில், 50 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர். வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (55). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தர்மலிங்கம் (60). இவர் ஒய்வு பெற்ற எஸ்.ஐ.. இருவரும் சேர்ந்து 2018ம் ஆண்டு வேலுாரில் கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கினார்கள்.
இதில் முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறியுள்ளனர். இதை நம்பிய ஆசிரியைகள் ராணிப்பேட்டையை சேர்ந்த ஜான்சிராணி 2.50 கோடி, வேலுாரில் மலர் 45 லட்சம் ரூபாய், தமிழ் செல்வி, 2. 50 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
இதே போல தமிழகம் முழுவதுமிருந்து ஆசிரியர்கள், பொது மக்கள் பணத்தை இவரிடம் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பல மாதங்கள் ஆகியும் அதற்கான வட்டி தரவில்லை.
இதனையடுத்து பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். மகேஸ்வரி, தர்மலிங்கம் தம்பதியினர் ரூ.50 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.
அந்த பணத்தில் அவர்களது மகள்களான கீர்த்தனா, பூபானா ஆகியோர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, மகேஸ்வரி, தர்மலிங்கம் ஆகியோர் மீது வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.
இதனை அறிந்து கொண்ட இவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வேலூரில் பதுங்கியிருந்த மகேஸ்வரியை போலீசார் இன்று கைது செய்து மகளிர் சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான அவரது கணவர் தர்மலிங்கத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.