257 குற்ற வழக்கில் உதவி செய்த ரேம்போ மொப்பநாய் உயிரிழந்தது - கனத்த மனதுடன் பிரியா விடை கொடுத்த போலீசார்
திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு ரேம்போ என்று போலீசார் பெயர் சூட்டினார்கள்.
இதனையடுத்து, இந்த ரேம்போவுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. இதன் பிறகு, பல்வேறு குற்ற வழக்குகளை ரேம்போ கண்டுபிடித்தது. இப்படியே கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 257 குற்றச் சம்பவங்களில் மோப்பநாய் ரேம்போ உதவி செய்துள்ளது.
சில நாட்களாக மோப்ப நாய் ரேம்போ உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் ரேம்போ மோப்ப நாய் பரிதாபமாக உயிரிழந்தது. பல குற்ற வழக்குகளுக்கு உதவி செய்த ரேம்போ உடலுக்கு திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், உரிய மரியாதையும் போலீசார் மோப்ப நாய் ரேம்போவுக்கு பிரியாவிடை கொடுத்தார்கள். இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.