சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வட கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையிலும் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருவதால், சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.