குடிபோதையில் பெற்ற தாயை துடிதுடிக்க கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் - அதிர்ச்சி சம்பவம்
குடிபோதையில் தாயை கத்தியால் துடிதுடிக்க குத்திக் கொலை செய்த மகனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மனைவி அஞ்சம்மாள் (64). இவரது மகன் பாவைநாதன். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், பாவைநாதன் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்.
இதனால், குடித்துவிட்டு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், பாவைநாதனை அவரது தாயார் அஞ்சம்மாள் கண்டித்து வந்துள்ளார். ஆனால், பாவைநாதன் அதனை கேட்காமல் தொடர்ந்து மது அருந்தி வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரை அஞ்சம்மாள் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாவைநாதன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அஞ்சம்மாளை சரமாரியாக குத்தி தாக்கினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து அஞ்சம்மாள் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அஞ்சம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும், பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அஞ்சம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பாவைநாதனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயையே மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.