நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எரித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்
நாகையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகரறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் ஏறுஞ்சாலை கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வந்திருந்தார்.
இவருக்கு அனுசியா (36) என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள். ராஜ்குமாருக்கு, பாப்பாகோவில் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டில் இருந்த ராஜ்குமாரை, மனோகரன் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டு வாசலில் எரிந்த நிலையில் ராஜ்குமார் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமாரின் உறவினர்கள், நாகை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இது குறித்து ராஜ்குமாரின் மனைவி அனுசியா அளித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாப்பாகோவிலை சேர்ந்த மனோகரன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.