‘வேறு ஜாதி பையனை திருமணம் செய்வீயா?’ - தாய் உதவியுடன், அக்காவின் தலையை துண்டித்து செல்பி எடுத்த கொடூரத் தம்பி
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் (23). இவர் கீர்த்தி மோடே (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலன் அஜய், வேறு ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களது காதல் பெண் வீட்டிற்கு தெரிய வந்தது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் வீட்டில் எதிர்ப்பு அதிகமானதால், அஜய்-கீர்த்தி இருவரும் கடந்த ஜூன் 21ம் அன்று கிராமத்தை விட்டு ஓடிவிட்டனர்.
இதை அறிந்த கீர்த்தியின் வீட்டார் கடும் கோபம் அடைந்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் பெண் ஓடிச்சென்றதாக அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ஏளனமாக பேசியுள்ளனர்.
இதனால், கீர்த்தியின் குடும்பத்தார் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கிராமத்திலிருந்து தப்பிய காதல் ஜோடி, புனே சென்று அங்கு திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் ஆலண்டி என்கிற பகுதியில் குடியிருந்து வந்தனர். நாட்கள் கடந்த நிலையில், தங்கள் மீதான வெறுப்பு குறைந்திருக்கும் என்று நம்பிய தம்பதியர் ஊருக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, இருவரும் அவுரங்காபாத்தில் வைஜாபூர் தாலுகாவில் உள்ள கோய்கான் என்ற கிராமத்தில் வீடு எடுத்து தங்கினார்கள். இத்தகவல், கீர்த்தியின் வீட்டிற்கு சென்றது. கீர்த்தியின் தம்பி சங்கேத் மோடே (19) மற்றும் அவரது தாய் ஷோபா எஸ்.மோடே (40) ஆகிய இருவரும், கீர்த்தி வீட்டிற்கு வந்துள்ளனர்.
தாய் மற்றும் தம்பியை கண்டதும் கீர்த்தி மகிழ்ச்சி அடைந்து அவர்களை வீட்டிற்குள் வரவேற்றிருக்கிறாள். கீர்த்தியுடன் தாயும், தம்பியும் நன்றாக பேசி இருக்கிறார்கள். ‛எங்களுக்கு ஏதாவது தரலாமே...’ என தாய் ஷோபா கேட்க, ‛டீ மற்றும் ஸ்நாக்ஸ் செய்து தருகிறேன்...’ என்று கூறி, கீர்த்தி கிச்சனுக்குச் சென்றிருக்கிறாள்.
அப்போது, கீர்த்தி கிச்சனுக்குச் செல்ல, பின் தொடர்ந்து தாயும், தம்பியும் உள்ளே சென்றிருக்கிறார்கள். சமைத்துக் கொண்டிருந்த கீர்த்தியின் கால்களை பிடித்து கீழே தள்ளிய தாய் ஷோபா, அவரது கால்களை பிடித்துக் கொண்டார். அந்த நேரத்தில் தம்பி சங்கேத் மோடே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அக்கா கீர்த்தியின் கழுத்தில் அறுத்தான். ரத்த வெள்ளத்தில் கீர்த்தி துடிதுடித்தாள்.
அவள் துடிப்பதையும் பார்த்து தம்பி கத்தியை வைத்து கீர்த்தியின் தலையை தனியாக அறுத்து துண்டித்தான். இதன் பிறகு, அக்காவின் தலையோடு செல்ஃபி எடுத்த சங்கேத் மோடே, பின்னர் வீட்டின் வெளியே தலையை வீசிவிட்டு தாயுடன் புறப்பட்டு சென்றான். சிறிது நேரத்தில் வீட்டில் வெளியே கிடந்த கீர்த்தியின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கோய்கான் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தான் எடுத்த செல்ஃபி போட்டோக்களை வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்த அவரது தம்பி சங்கேத் மோடோ, தனது குடும்பத்திற்கு கலங்கம் ஏற்படுத்திய அக்காவை கொன்று விட்டதாக, பெருமிதமாக கூறியுள்ளான். த
னது தாய் ஷோபா உடன், கோய்கான் காவல்நிலையத்திற்கு வந்து சரணடைந்தான். வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்ததற்காக, சொந்த மகளை, மகனுடன் சேர்ந்து தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.