ஆடு என்று நினைத்து ஆளை வெட்டிய குடிகார ஆசாமி - பலி பீடத்தில் நடந்த விபரீத சம்பவம்
ஆடு பலி கொடுக்கும்போது ஒரு நபர் ஆட்டை வெட்டாமல் ஆளை வெட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் மதனபள்ளி கிராமப்புற மண்டலத்தில் வலசப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் விலங்குகளை பலியிட்டு உள்ளூர் எல்லம்மா கோவிலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சலபதி என்ற நபர் கையில் அருவாளோடு ஆடுகளை வெட்ட பலி பீடத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த நேரத்தில் அவர் குடி போதையில் இருந்துள்ளார்.
அந்த ஊரை சேர்ந்த சுரேஷ் என்ற 35 வயதான நபர் ஞாயிற்றுக்கிழமை சங்கராந்தி கொண்டாட்டத்தின் போது, ஒரு ஆட்டை பலி கொடுக்க கயிறு கட்டி இழுத்து வந்துள்ளார். அப்போது அந்த சலபதி மது போதையில் இருந்ததால், ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக அந்த ஆட்டை பிடித்திருந்த சுரேஷின் கழுத்தை வெட்டியுள்ளார்.
இதனால், கீழே சரிந்து விழுந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சுரேஷை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சலபதியை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.