‘எனக்கு 85... உனக்கு 65...’ காதலை வெளிப்படுத்தி மூதாட்டியை கரம் பிடித்தார் முதியவர் - சுவாரஸ்ய நிகழ்வு

love marriage 65 grand ma 85 grand pa
By Nandhini Jan 24, 2022 07:35 AM GMT
Report

மைசூருவில் 65 வயது மூதாட்டியை 85 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் முதியவரின் 9 பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரு டவுன் உதயகிரி கவுசியாவைச் சேர்ந்தவர் முஸ்தபா (85). இவர் இறைச்சிக் கடை உரிமையாளர். இவருடைய மனைவி குர்ஷித் பேகம். இத்தம்பதிக்கு 9 பிள்ளைகள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. அனைவரும் தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இதனால், முஸ்தபா தனது மனைவி குர்ஷித் பேகத்துடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் குர்ஷித் பேகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால், முஸ்தபா தனிமையில் வாழ்ந்து வந்தார். வயோதிகம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தனக்கு ஒரு துணை தேவை என்று உணர்ந்தார். இதனையடுத்து, அவர், அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த பாத்திமா பேகம் (65) என்ற மூதாட்டியை சந்தித்தார்.

இருவரும் நன்றாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று பாத்திமா பேகத்திடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார் முஸ்தபா. முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகம் ஏற்றுக் கொண்டார். மேலும், திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர்களது காதல் திருமணத்திற்கு முஸ்தபாவின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரும் சம்மதம் தெரிவித்தார்கள். மேலும், அவர்களே முன்னின்று முஸ்தபாவுக்கும், பாத்திமா பேகத்திற்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக இவர்களது திருமணம் முஸ்தபாவின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. பின்னர் புதுமண தம்பதியிடம், அனைவரும் ஆசி பெற்றுக் கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

‘எனக்கு 85... உனக்கு 65...’ காதலை வெளிப்படுத்தி மூதாட்டியை கரம் பிடித்தார் முதியவர் - சுவாரஸ்ய நிகழ்வு | Samugam Love Marriage 65 Grandma 85 Grandpa