பிரசவ வலியில் துடிதுடித்த பெண் - டோலி கட்டி 6 கி.மீ. சுமந்து சென்ற கிராம மக்கள்
பிரசவ வலியில் துடிதுடித்த பெண்ணை டோலி கட்டி 6 கி.மீ. வரை கிராம மக்கள் சுமந்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
வேலூர் மாவட்டம், பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, அல்லேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன.
இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பீஞ்சமந்தையைச் சேர்ந்தவர் ரஞ்சித்.
இவருடைய மனைவி அனிதா (24). அனிதா நிறைமாத கர்ப்பிணி. அனித்தாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பீஞ்சமந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணி அனிதாவை கொண்டு செல்ல ஊர் மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் பிரசவ வலி அதிகமானது.
வனத்திற்க்குள் முறையான பாதை இல்லாததாலும் மாற்று வழியாக 6 கிலோ மீட்டர் உள்ள ஒத்தையடி பாதையை கடந்து, அத்தியூர் ஊராட்சி கலங்குமேடு பகுதிக்கு சென்று, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தனர்.
இதனையடுத்து, ஒரு மரக்கம்பு மூலம் போர்வையில் டோலி கட்டி அதில் நிறைமாத கர்ப்பிணியை படுக்க வைத்து தங்கள் தோல்களில் சுமந்தவாறு கிராம மக்கள் தூக்கிக் கொண்டு வந்தனர்.
சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து நிறைமாத கர்ப்பிணியோடு அத்தியூர் ஊராட்சி கலங்குமேட்டை சென்றடைந்தனர்.
பின்னர் அங்கிருந்த 108 ஆம்புலென்ஸ் மூலம் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனிதா கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து அனிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அனிதா-ரஞ்சித் தம்பதியினரும், அனிதாவை சுமந்து வந்த ஊர் மக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.