துணிகளை தூக்கிப்போட்டு நரிக்குறவர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம்

Dismissal samugam- driver--conductor
By Nandhini Dec 10, 2021 04:59 AM GMT
Report

நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, தாய், தந்தை, குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துனர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம். இவர் ஒரு மீன் வியாபாரி. இந்த தாயாரை கடந்த 2 தினங்களுக்கு முன்பு, மீன் வாடை வருகிறது என்று பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அந்த தாயார் கண்ணீருடன் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவியது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இதே போன்ற சம்பவம் தற்போது நாகர்கோவிலில் நடந்துள்ளது.

வடசேரி பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் - திருநெல்வேலிக்கு புறப்பட்ட பேருந்திற்குள் ஏறிய நாகர்கோவிலை சேர்ந்த நரிக்குறவர் குடும்பத்தினரான வயது முதிர்ந்த தாய், பார்வை மாற்றுத்திறனாளி தந்தையுடன் வந்த ஒரு குழந்தை ஆகிய 3 பேரை பேருந்திலிருந்து இறக்கி விட்டு, அவர்களது உடமைகளை வெளியில் தூக்கி எறிந்து வெளியே செல்லுங்கள் என்று நடத்துனர் கூறியிருக்கிறார்.

குழந்தை எதற்காக இறக்கி விடப்படுகிறோம் என்பது கூட தெரியாமல் கதறி அழ, முதியவர் என்ன செய்வதென்று அறியாமல் நடுரோட்டில் நின்றார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை கண்ட மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நரிக்குறவர் குடும்பத்தினரை நடுவழியில் இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பொறுப்பற்ற முறையில் பணி செய்ததாக கூறி அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து நாகர்கோவில் மண்டல போக்குவரத்து துறை மேலாளர் உத்தரவிட்டிருக்கிறார். 

துணிகளை தூக்கிப்போட்டு நரிக்குறவர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம் | Samugam Driver Conductor