யூ-டியூப் பார்த்து பிரசவம் செய்த கணவன் - இறந்து பிறந்த குழந்தை - ஆபத்தான நிலையில் மனைவி

samugam-death-baby
By Nandhini Dec 20, 2021 06:36 AM GMT
Report

யூ-டியூப்பை பார்த்து, தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவனால் பிறந்த ஆண் குழந்தை பரிதாபமாக இறந்த நிலையில், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). இவர் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மனைவி கோமதி (28). இவர்களக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கர்ப்பமுற்ற கோமதிக்கு கடந்த 13ம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர்.

இதனையடுத்து, குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18ம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இந்நிலையில், லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூப்பை பார்த்து பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதில், இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, மனைவிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டதால் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து, லோகநாதன் தனது அக்கா உதவியுடன் மனைவி மற்றும் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு மனைவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். கோமதி அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்நிலையில், புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் யூ- டியூப் மூலமாக மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுவது குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.