9 வயது குழந்தை உடலில் தீ வைத்து கொளுத்திய கொடூரச் சம்பவம் - போலீசார் தீவிர விசாரணை
பள்ளி இடைவேளையில் மாயமான மாணவி தீயில் கருகி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி நரபலி கொடுக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மகள் பிரித்திகா (9). பிரித்திகா 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு காலையில் பள்ளிக்குச் சென்ற பிரித்திகா பள்ளி இடைவேளை நேரத்தில் மாயமாகி உள்ளார். இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் பிரித்திகா.
இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் மாணவியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரித்திகாவின் இறப்பு குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாய் தடயவியல் துறையினருடன் 3 நாட்களாக முகாமிட்டு தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இறப்புக்கு தீக்காயம் தான் காரணம் என்றும், மண்ணெண்ணையை ஊற்றி தீ வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
மாணவியின் மரணத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது மாணவியை நரபலி கொடுத்து இருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.