கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாகத் தாக்கிய பேருந்து நடத்துனர் கைது
கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய தனியார் பேருந்தின் நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே 3 நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் நின்ற தனியார் பேருந்தில் மனநலம் பாதித்த ஒருவர் ஏறினார். அப்போது, அவரிடம் பயணச்சீட்டு வாங்குமாறு நடத்துனர் கூறியிருக்கிறார்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர் நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நடத்துனர் அந்த நபரை சரமாரியாக தாக்கி, இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலரும் நடத்துனருக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வந்தனர். மேலும், இது ஈவு இரக்கமற்ற செயல் என்றும் விமர்சினம் செய்தனர்.
இதனையடுத்து, நடத்துனர் வீரமணியை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகி உள்ள ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.