சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீரென மரணம் - போலீசார் தீவிர விசாரணை
வியாசர்பாடியை சேர்ந்தவர் ரஞ்சித் ( 22). இவர் கேமராமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் பெரம்பூர் பி.பி. சாலையில் உள்ள நண்பர் கிரிதரனுடைய மருந்தகத்திற்கு சென்றார். பிறகு, நண்பர்கள் 4 பேர் சேர்ந்து பிரபல தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்டார்கள். அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
இந்நிலையில், ரஞ்சித் வீட்டிற்குச் சென்று இரவு 10 மணியளவில் இடது பக்கம் வலிக்கிறது என்று அண்ணனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் வாந்தி எடுத்ததால், அவரது அண்ணன் ரஞ்சித்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென மயக்கம் அடைந்தார்.
மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிக்கன் சாப்பிட்ட 4 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் மற்ற மூன்று பேரும் நலமாக உள்ளனர்.
இதனால், போலீசார் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.