3 மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் உயிரோடு திரும்பி வந்த அதிசயம் - குடும்பத்தினர் மகிழ்ச்சி
3 மாதங்களுக்கு முன்னர் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிரோடு திரும்பியதால் குடும்பத்தில் மகிழ்ச்சியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், சிக்கமாளூரு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜப்பா (60). இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். பிறகு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் 2வது மகள் நேத்ராவதி வீட்டிற்கு சென்றார். அங்கேயே தங்கி இருந்தபடி மருத்துவமனையில் சிறு வேலைகளை செய்து வந்தார்.
3 மாதத்திற்குப் முன்னர் அவர் மீண்டும் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் செப்டம்பர் 18ம் தேதி அன்று செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இது நாகராஜப்பா உடல் அடையாளங்களுடன் ஒத்து போனதால் அவர் தந்தை தான் என்று நேத்ரா அந்த உடலை பெற்றுக் கொண்டார். இதன் பிறகு, சொந்த ஊருக்குச் சென்று நேத்ரா அடக்கம் செய்துள்ளார்.
காரியம் நடத்தி முடித்து வீட்டில் அவரது போட்டோ பிரேம் போட்டு மாட்டினார். இது நடந்து 3 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில், நேற்று காலையில் சிக்கமாளூருக்கு நாகராஜப்பா சென்றார்.
பஸ்ஸிலிருந்து இறங்கிய அவரை கிராமத்தினர் ஒரு வித பயத்துடன் பார்த்தனர். அவரிடம் யாரும் நெருங்கி விசாரிக்க பயந்து ஓரத்திலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதை வித்தியாசமாக உணர்ந்த நாகராஜப்பா வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறார்.
அப்போது, அவரை குடும்பத்தினர் பார்த்து, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து, அப்பா இறந்து விட்டதாக நினைத்து வேறொருவரை அடக்கம் செய்த விபரம் தெரியவந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகராஜப்பா மகளிடம் சொல்லாமல் சென்றுவிட்டார்.
பல இடங்களில் சுற்றித் திரிந்த அவர் கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். தற்போது குடும்பத்தினரின் ஞாபகம் வர வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், நாகராஜப்பா என்று நினைத்து அடக்கம் செய்தது யாருடையது என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.