தந்தையை கவனிக்காத பிள்ளை - ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்
பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் மனமுடைந்த முதியவர் ஆற்று வெள்ளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்தவர் அருணாசலம் (75). இவருக்கு 4 மகன்கள் இருக்கிறார்கள். 4 மகன்களுக்கும் திருமணமாகி அதே ஊரில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெற்ற பிள்ளைகள் 4 பேரும் தன்னை கவனிக்க மறுத்ததால் மனம் உடைந்த அருணாச்சலம் தற்கொலை செய்து கொள்ள போவதாக பேரன்களிடம் கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறி சாத்தூர் வைப்பாற்றில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஏற்கனவே ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் அருணாச்சலம் அடித்துச் செல்லப்பட்டார்.
அப்போது, முட்செடிகளில் அருணாச்சலம் அதிர்ஷ்டவசமாக சிக்கினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விரைவாக ஆற்றில் இறங்கி கயிறு கட்டி முதியவரை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் முதியவரை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.