அதிர்ச்சி சம்பவம் - 4 பெண்களை நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்ற கொடூரக் கும்பல்
4 பெண்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கிய கும்பல், அப்பெண்களை குச்சிகளால் அடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சமீப காலமாக மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சியால்கோட் நகரில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி இலங்கையைச் சேர்ந்த நபரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்து சாலையில் வைத்தது. இந்தச் சம்பவம் உலக அளவில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பல், தெய்வ நிந்தனையில் ஈடுபட்ட நபரை போலீசார் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி காவல்நிலையத்தை சூறையாடி, தீயிட்டு கொளுத்தியது. இப்படிப்பட்ட குற்ற நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது பெண்களின் ஆடைகளை களைந்து சாலைகளில் ஊர்வலமாக அடித்து துன்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஃபைசலாபாத் நகரில் உள்ள கடை வீதியில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பதின்பருவத்தைச் சேர்ந்த பெண் உட்பட 4 பெண்களை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் சிலர் அடித்தும் தர தரவென இழுத்தும் ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள்.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் அப்பெண்களுக்கு உதவி செய்ய முன்வராமல் நிற்பது வீடியோவை காண்போர் கண்களில் கண்ணீர் வரச் செய்கிறது.
அந்த பெண்கள் சுமார் 1 மணி நேரம் இந்த கொடூரத்தை அனுபவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது -
அன்றைய தினம் பாவா சாக் மார்க்கெட்டுக்கு குப்பை பொருட்களை சேகரிக்க சென்றோம். மிகவும் தாகமாக இருந்ததால் உஸ்மான் எலக்ட்ரிக் கடைக்குள் சென்று தண்ணீர் கேட்டோம். ஆனால் தண்ணீர் கேட்ட எங்களை திருட வந்தவர்களாக நினைத்த அக்கடையின் உரிமையாளர் சதாம் எங்களை சிலருடன் சேர்ந்து கொண்டு தாக்கினார்.
எங்களை குண்டுக்கட்டாக தூக்கி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து சாலைகளில் ஊர்வலமாக கூட்டிச் சென்றனர். அங்கிருந்த ஒருவர் கூட எங்களுக்கு உதவ முன்வரவில்லை.
இவ்வாறு அப்பேட்டியில் அவர் கனத்த மனத்துடன் கண்ணீர் மல்க கூறினார்.