4 மகன்களை ரூ.62 ஆயிரத்துக்கு ஆடு மேய்க்க கொத்தடிமையாக விற்ற தந்தை - பரபரப்பு சம்பவம்
தஞ்சை அருகே கொத்தடிமையாக்கிய 4 சிறுவர்களை அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை, வல்லம் புதூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்கள் புகை மூட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.
4 மகன்களுடன் சுந்தர்ராஜன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் சுந்தர்ராஜனுக்கு தொடர்பு ஏற்பட்டது. கரிப் புகை மூட்டும் வேலையில் சுந்தர்ராஜனுக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால், தனது 4 மகன்களையும் கோவிந்தராஜிடம் ரூ.62 ஆயிரம் வாங்கிக் கொண்டு, 2 ஆண்டுகளுக்கு ஆடு மேய்ப்பதற்காக மகன்களை கொத்தடிமைகளாக விற்றுள்ளார்.
தஞ்சை, மன்னார்குடி பிரிவு சாலை சூரக்கோட்டை அருகே சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த ஒரு வழிப்போக்கர், 1098 சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் 4 சிறுவர்களையும் மீட்டு சிறுவர்கள் இல்லத்தில் சேர்த்தனர்.
இதனையடுத்து கோவிந்தராஜ் ரூ.50 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து, இந்த நான்கு சிறுவர்களையும் வேலைக்கு வைத்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் 4 சிறுவர்களுக்கும் கொத்தடிமை விடுதலை உத்தரவை வழங்கினார். மேலும் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.