காது கேட்காத மகன் - இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி - மகனை செதுக்கிய தாய்
காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனுக்கு, பிறர் பேசுவதை உணர வைத்து, நன்றாக பேச வைத்து, ஐ.ஏ.எஸ்.,தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளார் தாய் அமிர்தவள்ளி.
இது குறித்து தாய் அமிர்தவள்ளி பேசியதாவது -
என் மகன் ரஞ்சித்துக்கு சிறிது பேச வரும் என்றாலும், காது கேட்காது என்பதை, அவன் பிறந்து 7 மாதங்கள் கழித்து தான் எங்களுக்கு தெரிந்தது. சிறப்பு மருத்துவரிடம் காண்பித்த போது, 'காது கேளாதவர்களுக்கு பேச பயிற்சி தரும் சிறப்பு பள்ளியில் சேருங்கள்' என்றார். நாகர்கோவிலில் கிறிஸ்டோபர் என்பவர் காது கேளாதோர் பள்ளியை நடத்தி வருகிறார் என்று கேள்விபட்டவுடன் அங்கு சென்றோம்.
கிறிஸ்டோபர், லண்டனில் பயிற்சி பெற்றவர். 'பிறர் பேசும்போது உதடுகளின் அசைவை வைத்து, அவர்கள் என்ன பேசுகிறார் என்பதை நன்கு புரிந்து, காது கேட்கும் சக்தி இல்லாதவர்களால் பேசவும் முடியும்' என்றார்.
காது கேளாதவர்களும் பேசலாம் என்பதை நான் உணர்ந்தேன். உடனே, என் மகனை பேச வைக்கும் முறைகளை, கிறிஸ்டோபர் எனக்கு பயிற்சி கொடுத்தார். அதற்காக, காது கேளாதோரை பேச வைக்கும் படிப்பில் பி.எட். முடித்தேன். அதே நேரம், கோவையில் தனியார் சர்க்கரை ஆலை நிறுவனத்தினர், 'கஸ்துார்பா காந்தி காது கேளாதோர் வாய்மொழி பயிற்சி பள்ளி'யை தொடங்கினார்.
அங்கு பள்ளி ஆசிரியையாக வேலை கிடைத்தது. என் மகனை அதே பள்ளியில் சேர்த்துவிட்டேன். 'அ' என்று நான் உரக்க சொல்லுகையில், தொண்டையில் ஏற்படும் அதிர்வுகளை ரஞ்சித்தை தொட்டு உணரச் செய்து, எப்படி ஒலி உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள வைத்தேன். ஒற்றை எழுத்துக்களுக்கு பின் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தேன். பலமுறை உச்சரித்து பயிற்சி கொடுத்தேன்.
அவன் பேசும் போதும், எழுதும் போதும், ஆரம்பத்தில் தப்பும் தவறுமாக தான் இருந்தது. அதை பொறுமையாக சரி செய்தேன். அவனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கினேன். எந்தப் பொருள் எங்கு கிடைக்கும் என்று கடைகளுக்கு அழைத்து சென்று பொறுமையாக அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தேன். ஊர்களுக்கு செல்லும் போது வழியில் வரும் ஊர்கள், குளம், மரங்கள், வயல், பயிர் என்று விளக்கிக் கொண்டே செல்வேன்.
தனியார் தொழில்நுட்ப கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை என் மகன் முடித்தான். ஐ.ஏ.எஸ்., தேர்வையும் தமிழில் தான் எழுதினான். டெல்லியில் நடந்த நேர்முக தேர்வுக்கு தனியாக சென்று வந்தான்; தற்போது நன்றாக பேசுகிறான். வரும் டிசம்பரில் அவன் ஐ.ஏ.எஸ். பயிற்சி துவங்குகிறது. ஹிந்தி தெரியாது; ஆனால், அதை அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கும், எனக்கும் நிறையவே உள்ளது.
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியாக கூறினார்.