9 வருடமாக இலங்கை சிறையில் உள்ள இந்தியர் - தாய்நாட்டு சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு
9 ஆண்டுகளாக இலங்கை சிறையில் உள்ள இந்தியரை, இந்திய சிறைக்கு மாற்றக் கோரிய வழக்கை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மெஹ்ருன் நிஷா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது -
எனது கணவர் ரிபாயுதீன் மீது கடந்த 2013ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கை சிறையில் இதுக்கிறார். இலங்கை சிறையிலிருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து, இந்தியத் தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, 9 ஆண்டுகளாக இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்திய சிறைக்கு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் இலங்கை அரசின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நினைவூட்டல் கடிதம் அனுப்ப அறிவுறுத்தி, வழக்கை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.