தந்தை கண்டிப்பு - காவிரி ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
தந்தை திட்டியதால் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவர் ஒரு விவசாயி. இவருடைய மகள் துளசிமணி (35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், துளிசிமணி இன்று காலை வீட்டில் வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனால், அவரை தந்தை தங்கராசு கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த துளசிமணி, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து அல்லூர் காவிரி ஆற்றில் தண்ணீரில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்ற நிலையில் நடுஆற்றில் சற்று ஆழம் குறைந்த பகுதியில் நின்றுகொண்டு அவர் தத்தளித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள், கரையிலிருந்து கயிறு கட்டிக்கொண்டு ஆற்றில் நீந்திச் சென்றார்கள்.
பின்னர் நடு ஆற்றில் தண்ணீரின் நடுவே சிக்கித் தவித்த துளசி மணியை பத்திரமாக மீட்டு அவர்கள் கரைக்கு கொண்டு வந்தார்கள். இதனையடுத்து, அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.