‘ஜெயம் செய்தால் அம்மாக்கு உயிர் வந்துவிடும்...’ அழுகிய நிலையில் 5 நாட்களாக தாயின் உடலை வைத்து ஜெபம் செய்த மகள்கள்… அதிர்ச்சி சம்பவம்
திருச்சி அருகே ஜெபம் செய்தால் உயிர்த்தெழுந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை வைத்து ஜெபம் செய்த சகோதரிகளிடமிருந்து 4 மணிநேர போராட்டத்திற்கு பின் சடலத்தை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (75) என்பவர், திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்திருந்தனர்.
ஊருக்கு சற்று தொலைவில் இவர்களது வீடு இருந்ததால், ஊர்மக்களும் இவர்களும் தொடர்பில்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலான நேரத்தில் இவர்கள் ஜெபம் செய்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க இவர்களது உறவினர் ஒருவர் சொக்கம்பட்டிக்கு வந்து மேரியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது, அவர் இறந்து விட்டதும், அவரது சடலத்தை வீட்டினுள் கிடத்தி வைத்து மகள்கள் இருவரும் தங்களது தாயை உயிர்பிப்பதாகக் கூறி ஜெயம் செய்து வருவதை அறிந்து அவர்களிடம் பேசி அடக்கம் செய்ய கூறி இருக்கிறார். ஆனால் அவரை சகோதரிகள் இருவரும் திட்டி வெளியே அனுப்பி உள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து வந்த அவர் ஊர் மக்கள் சிலரிடம் இதுகுறித்த தகவலை கொடுத்தார். இதுகுறித்து ஊர்மக்கள் மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் நேற்று இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வீட்டின் கதவுகளை தட்டியபோதும், சகோதரிகள் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தார்கள். பின்னர் உள்ளே சென்று போலீசார் பார்த்தபோது, மேரியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அவரது உடலில் பைபிள் ஒன்றை வைத்து ஜெபம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது, தங்களது தாயார் உயிரோடு இருப்பதாகவும், அவரது உடலை எடுத்துச் செல்லவிடமாட்டோம் என்று கூறி காவல்துறையுடன் மேரியின் மகள்கள் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார், ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினரை வரவழைத்து மேரியை பரிசோதனை செய்தபோது, அவர் உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவரது உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது சகோதரிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவரும் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் மேரியின் மகள்கள் இருவரும் மருத்துவர் கூறியதையும் ஏற்க மறுத்து தங்களது தாய் இறக்கவில்லை, அவர் உயிருடன் வருவார் எனக் கூறி மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார்கள்.
பின்னர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரும் மேரி எவ்வாறு இறந்தார் என்பதை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக, பிரேதபரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இரவு 9 மணிக்கு துவங்கி சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னரே சகோதரிகளிடமிருந்து அவர்களது தாயாரின் உடல் பிரேத பரிசோதனை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்தவர்களை உயிர் பிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையால் சகோதரிகள் தங்களது தாயாரின் உடலை வைத்து ஒரு வார காலமாக ஜெபம் செய்து வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.