பிரதமர் மோடியிடம் ஜாலியாக பேசிய 10 வயது சிறுமி - புகைப்படம் வைரல்
மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மூத்த தலைவரின் 10 வயது பேத்தி அனிஷா, பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடி, அனிஷாவிடம் சகஜமாக பேசும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணா விகே பாட்டீல். இவரது மகன்தான் அகமது நகர் மக்களவை உறுப்பினர் (எம்.பி.) சுஜய் விகே பாட்டீல். நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணா விகே பாட்டீல் தனது மகன், மருமகன் மற்றும் 10 வயது பேத்தி அனிஷா ஆகியோருடன் பிரதமர் அலுவலகத்துக்கு சென்று மோடியை நேரில் சந்தித்தார்.
அப்போது, கொரோனா தொற்று பரவிய போது, மகாராஷ்டிராவின் அகமது நகரில் சிறப்பான பணியாற்றிய விகே பாட்டீல் குடும்பத்தினரை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
ராதாகிருஷ்ணா விகே பாட்டீலின் 10 வயது பேத்தி அனிஷா பிரதமருடன் மிகவும் சகஜமாக பேசினாள். பிரதமர் மோடி அனிஷாவிடம் அவரது படிப்பு, விளையாட்டு மற்றும் அவரது தனிப்பட்ட ஆர்வம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டதற்கு அனிஷாவும் பதில் கூறியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.