விமான விபத்தில் உயிரிழந்த நபர் 45 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு திரும்பி வந்த அதிசயம்!
கேரளாவைச் சேர்ந்தவர் சஜ்ஜத் தங்கல் (70). இவர் 1970 ஆம் ஆண்டு அபுதாபி, துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், 1976ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் திரும்ப சஜ்ஜத் திட்டமிட்டார். சில தடங்கல் காரணமாக அவர் வரவிருந்த விமானத்தில் வரவில்லை. ஆனால் அவர் தான் வருவதாகக் கூறிய விமானம் விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தில் பயணம் செய்த 95 பேர் இறந்து போனார்கள். சஜ்ஜத்தும் இந்த விபத்தில் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கருதி, அவரை தொடர்புகொள்ளாமல் விட்டுவிட்டனர். வேறொரு விமானத்தில் மும்பை வந்திறங்கியவர் விபத்தில் நண்பர்கள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டார்.
இதனையடுத்து, அவர் ஒரு தொண்டு நிறுவனம் அவரை மீட்டு பராமரித்து வந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு மீண்டும் சுயநினைவு திரும்பியது. அதற்குப் பின்னர் தான் வசித்த இடத்தைப் பற்றியும், குடும்பத்தாரைப் பற்றியும் தொண்டு நிறுவனத்தாரிடம் கூறினார். அவர்கள் சஜ்ஜத்தின் குடும்பத்தைக் கண்டுபிடித்தார்கள்.
சஜ்ஜத்தின் 91 வயது தாயுடன் தொலைபேசியில் பேச தொண்டு அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று தனது சொந்த ஊரான சதம் கோட்டாவுக்குச் சென்ற சஜ்ஜத் தங்கல், 45 ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தாருடன் இணைந்தார்.
அவருக்கு இனிப்புடன் காத்திருந்த தாய் பாத்திமா பீவி, தனது மகனைக் கண்டதும் ஆரத்தழுவி கண்ணீர் மல்க வரவேற்பு கொடுத்தார். சஜ்ஜத்தும் கண்கலங்க, ஒட்டுமொத்த ஊர் மக்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். தான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், குடும்பத்தாரையும் தாயாரையும் வாழ்வில் மீண்டும் சந்திப்பேன் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனவும் மகிழ்ச்சி பொங்க சஜ்ஜத் கூறினார்.